Saturday, June 17, 2006

பாரத ரத்னா

இணையத்தில் மேய்ந்து கொண்டிருக்கும் போது எதேச்சையாக பாரத ரத்னா பற்றி படிக்க நேர்ந்தது. அப்பொழுதே வலைப்பதிவு ஆரம்பிக்கும் பொழுது அதைப் பற்றி எழுத வேண்டும் என முடிவு செய்து விட்டேன். அதன் பலனே இப்பொழுது நீங்கள் படித்துக் கொண்டிருக்கும் பதிவு.

பாரத ரத்னா விருது பற்றியும் அவ்விருதினை பெற்ற தமிழர்கள் பற்றியும் பேசுவதே இந்த பதிவின் நோக்கம். ஏன் தமிழர்கள் மட்டும் என்ற கேள்வி எழலாம். இது வரை மொத்தம் 41 பேர் (8 தமிழர்கள் உட்பட) இந்த உயர் விருதினை வாங்கியிருப்பதாலும், ஒவ்வொருவரைப் பற்றியும் தனிப்பதிவு போடும் எண்ணம் இருப்பதாலும் தமிழர்களோடு சுருக்கிக் கொண்டேன்.


பாரத ரத்னா பற்றி:

தாய் நாட்டிற்காக உச்சகட்ட சேவை செய்ததற்காக இந்திய அரசாங்கத்தால் வழங்கப்படும் குடிமகன்(ள்) விருது தான் பாரத ரத்னா. இந்த விருது வழங்கும் முறை 1954ம் ஆண்டு அப்போதைய குடியரசுத் தலைவர் டாக்டர். ராஜேந்திர பிரசாத் அவர்களால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

பாரத ரத்னா விருது இந்திய அரசாங்கத்தால் இந்தியர்க்காக வழங்கப்படும் விருதாக இருந்தாலும் இவ்விருது இருமுறை இந்தியர் அல்லாதோர்க்கும் வழங்கப்பட்டுள்ளது. அவ்விருவரும் கான் அப்துல் காபர் கான் மற்றும் நெல்சன் மண்டேலா ஆவர். இவர்களைத் தவிர வெளிநாட்டில் பிறந்து இந்தியாவில் மாபெரும் சமுதாய சேவை செய்து இந்தியராக தன்னை மாற்றிக் கொண்ட பெண்மணி ஆக்னஸ் ஜான்ஷா போஜஸியூ-ம் இவ்வுயர் விருதினைப் பெற்றுள்ளார் (இவர் யார் என்று நண்பர்கள் பின்னூட்டத்தில் தெரிவிக்கலாம்).


பாரத ரத்னா வாங்கியுள்ள தமிழர்கள்:

நான் ஏற்கனவே குறிப்பிட்டுள்ளது போல் இவ்விருது இதுவரை எட்டு தமிழர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. விருது வழங்கிய ஆண்டு வரிசைப்படி அவர்களின் விபரம்.

1. சர்வேபள்ளி இராதாகிருஷ்ணன் (1954)
2. சக்ரவர்த்தி இராஜகோபாலச்சாரி (1954)
3. சி. வி. இராமன் (1954)
4. காமராஜ் (1976)
5. எம். ஜி. இராமச்சந்திரன் (1988)
6. ஏ. பி. ஜெ. அப்துல் கலாம் (1997)
7. எம். எஸ். சுப்புலெட்சுமி (1998)
8. சி. சுப்ரமணியன் (1998)

இவர்களில் ஒவ்வொருவரைப் பற்றியும் மேலே குறிப்பிட்டுள்ள வரிசையில் தனிப்பதிவில் அலசுவது தான் எனது நோக்கம். விரைவில் இராதாகிருஷ்ணன் அவர்கள் பற்றிய பதிவுடன் உங்களை சந்திக்கிறேன்.

நட்புடன்,
நாகையன்.

Wednesday, June 14, 2006

முதல் வணக்கம்

அனைவருக்கும் எனது முதல் வணக்கம்.

எழுதுவது எனக்கு பழக்கப் பட்ட கலை அல்ல. இருந்தாலும் "சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்" அல்லவா? இணையம் தந்த கொடையால் அந்த கலையை வளர்த்துக் கொள்ள நான் செய்யும் முயற்சியே இந்த வலைப்பூ.

எழுதுவது தான் எனக்கு பழக்கம் இல்லையே தவிர, எழுத்து எனக்கு சிறிது பழக்கமானது தான். பாட்டுக்கொரு புலவன் பாரதி என்னை சிந்திக்க வைத்திருக்கிறார். கல்கி என்னை தாலாட்டி இருக்கிறார். பொன்னியின் செல்வன் படித்து இப்படியும் கூட ஒரு காவியத்தை தமிழில் படைக்க முடியுமா என்று வியந்திருக்கிறேன். சுஜாதாவும் வைரமுத்துவும் என்னை பல முறை "அட" போட வைத்திருக்கிறார்கள்.

தமிழ் மணத்தில் ஓராண்டுக்கு மேலாக பல பதிவுகளை படித்து வருகிறேன். நானும் எழுதலாம் என்று முடிவு செய்வதற்கு தான் சிறிது தாமதமாகி விட்டது :-)

என்னைப் பற்றி,
நான் பிறந்து வளர்ந்து(!!!) பள்ளிப் படிப்பை முடித்தது வரை நாகை என்னும் நாகப்பட்டினத்தில். பொறியியல் பட்டம் பெற்றது கோவை அரசு தொழில் நுட்பக் கல்லூரியில். இப்பொழுது பணியாற்றிக் கொண்டிருப்பது சென்னையில் உள்ள ஒரு (அதே, அதே தான்) மென்பொருள் நிறுவனத்தில்.

தமிழ் வலையுலக ஜோதியில் என்னையும் இணைத்துக் கொள்ள விழைகிறேன். மீண்டும் சந்திப்போம்.

நன்றி,
நாகையன்.